‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்தது! விஜய்யை கைது செய்ய கோரி இந்திய தேசிய லீக் கட்சி புகார்
‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்தது!
தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் விஜய் படத்தின் லீக் பரபரப்பு;
முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் தேசிய லீக் கட்சி புகார்!
படக்குழுவுக்கும், கட்சிக்கும் இடையே புதிய திருப்பம்!
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) திரைப்படம், இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமலே முழுமையாக இணையத்தில் கசிந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் எச்.வினோத் (H. Vinoth) இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரித்துள்ள இந்தப் படம், ரூ.450 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இணையத்தில் கசிந்த வீடியோக்களில் 5 நிமிடங்கள் 31 விநாடிகள் நீளமான விஜயின் அறிமுகக் காட்சி, ஒரு சண்டைக் காட்சி, ‘ஒரு பேரே வரலாறு’ உள்ளிட்ட பாடல் காட்சிகள் முதலில் வெளியாகின. இதையடுத்து, சில மணி நேரங்களிலேயே முழுப்படமும் பல இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. கசிந்த வீடியோ, ஒரு திரையரங்கில் நடத்தப்பட்ட சோதனைக் காட்சியின் (test screening) போது பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
படக்குழுவின் சட்ட நடவடிக்கைகள்:உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.“வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட எந்த டிஜிட்டல் தளங்களிலும் லீக் செய்யப்பட்ட வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது, சேமிப்பது, பகிர்வது, பதிவேற்றுவது அல்லது பரப்புவது என அனைத்து செயல்களும் தீவிர குற்றச் செயல் மற்றும் பதிப்புரிமை மீறல் ஆகும். இதில் ஈடுபடும் ஒவ்வொருவரும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்” என படத்தயாரிப்பாளர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களின் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.ரஜினிகாந்த்: “ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்”.கமல்ஹாசன்: “ஜனநாயகன் லீக் என்பது ஒரு விபத்து அல்ல, அது முறையான திட்டமிடல் மற்றும் மேலாண்மை தோல்வியின் விளைவு. சென்சார் தாமதமே பைரசிக்கு வழிவகுத்தது”.சூர்யா: “இதயம் நொறுங்கும் அளவுக்கு வருத்தம். இது அநியாயம். இந்தப் படத்தைப் பார்க்கவோ, பகிரவோ வேண்டாம். அணியின் உழைப்பை மதியுங்கள்”.சிவகார்த்திகேயன்: “நூற்றுக்கணக்கானோரின் கனவு, வியர்வை இப்படியே வீணாக்கப்படக் கூடாது. குற்றவாளிகள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்”.
புதிய திருப்பம்: இந்திய தேசிய லீக் கட்சி புகார்!
“ஜனநாயகன் படத்தின் முன்னோட்ட காட்சியில் வெடிகுண்டு செய்து, ஊர் திருவிழாவில் பொதுமக்கள் கூடும் இடத்தில் ஒரு முஸ்லிம் குண்டு வைப்பது போன்ற காட்சி வருகிறது. தேர்தல் நேரத்தில் முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் செய்யும் நடிகர் விஜய்யைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஏற்கனவே ‘துப்பாக்கி’, ‘பீஸ்ட்’ போன்ற படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளார். இப்படம் சென்சார் அனுமதி பெறாத நிலையில், தேர்தல் நேரத்தில் வெறுப்புப் பிரசாரத்திற்கு முயற்சிப்பதாகத் தெரிகிறது” என்று கூறப்பட்டுள்ளது.:
ஆகவே நடிகர் ஜோசப் விஜய் மற்றும், இயக்குநர் எச். வினோத், கே.வி.என் புரொடக்சன்ஸ் உரிமையாளர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மதிப்பிற்குரிய மாநகர காவல் ஆணையரை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
‘ஜனநாயகன்’ படம் ஏற்கனவே பல மாதங்களாக சென்சார் (CBFC) சிக்கல்களால் வெளியாகாமல் தடைபட்டு வந்தது. சில காட்சிகள் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் மற்றும் இந்திய ராணுவத்தைப் பற்றிய குறிப்புகள் சரியான முறையில் கையாளப்படவில்லை எனப் புகார்கள் எழுந்ததே இதற்குக் காரணம். இந்த நிலையில், தற்போது முழுப்படமும் லீக்காகியுள்ளதால், திரையரங்குகளில் வெளியாகும் போது மேலும் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படும் எனத் திரை விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Editor