பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்திய அநுர அரசு:மனித உரிமை விடத்தில் நம்பகத்தன்மையை இழந்தது ! நிரோஷ்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்திய அநுர அரசு !

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்திய அநுர அரசு:மனித உரிமை விடத்தில் நம்பகத்தன்மையை இழந்தது ! நிரோஷ்

உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அச்சட்டத்தினை நீக்காது மீளவும் தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா   நிரோஷ்  தெரிவித்தார்.

பாடகர் சங்கீத்தனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையைக் கண்டித்து வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இன்றைய அரசாங்கம் எதிர்க் கட்சியில் உள்ள போது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக போராடினர். அதனை இல்லாமலாக்குவோம் என மக்களின் ஆணையினைப் பெற்றனர். ஆட்சிக்கு வந்த பின்னர் அச் சட்டத்தின் வாயிலாக மக்களின் உணர்வுகளை அடக்குவதற்கு முயற்சிக்கின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக மேதாகம் கொழுக்கட்டை விளையாட்டாக மேலுமொரு பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை அமுல்ப்படுத்த எத்தனிக்கின்றனர். நாங்கள் சரியான மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்கின்றோம்.
அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் தமிழ்த் தேசிய விடுதலைப்பாடல்களை பயன்படுத்தியமை வெளித்தெரிந்த உண்மை. ஆனால் ஒரு கலைஞன் தன்னுடைய ஆற்றலில் விடுதலைப் போராட்ட இசையை இசைக்கும் போது மிகவும் கொடூரமான சட்ட ஏற்பாடுகளை அரசு அதிகம் பிரயோகித்த உதாரணமே நடைபெற்றுள்ளது.
நாங்கள் கௌரவ நீதிமன்றங்களின் தீர்ப்பினை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதனை மதிக்கின்றோம். அதனை கேள்விக்குட்படுத்தவில்லை. மாறாக அரசாங்கம் குற்றங்கள் தொடர்பாக பிரயோகிக்கும் சட்டங்களின் அடிப்படைகள் தொடர்பாவே எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றோம். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா   நிரோஷ்  தெரிவித்தார்.