வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் புதிய கூட்டணி சரிவு - அதிகாரப் போட்டியே காரணம்
வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் புதிய கூட்டணி சரிவு
வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கத் திட்டமிட்டிருந்த புதிய கூட்டணி, அதிகாரப் போட்டி காரணமாக சரிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் தங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மறைவுக்குப் பின்னர் கூட்டணித் தலைமைக்காக குளிர்ப் போர் மூண்டுள்ளதாகத் தெரிகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) முன்னதாக இந்தக் கூட்டணியிலிருந்து விலகி கடைசிப் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. எனினும், மீண்டும் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
மே ஒன்றாம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்க் கட்சிகள் தனித்தனி மே தினப் பேரணிகளை நடத்தின. இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கில் முல்லைத்தீவு மங்குளம், கிழக்கில் பட்டிப்பளை ஆகிய இடங்களில் இரண்டு பெரும் பேரணிகளை நடத்தியது.
மங்குளத்தில் இடம்பெற்ற மேதின நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு முதலில் தனது கட்சிக்குள்ளேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினார். கிழக்கில் பட்டிப்பளை நிகழ்வில் இடம்பெற்ற மேதின நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சணக்கியன் ராசமாணிக்கம், புதிய அரசியல் அமைப்பூடாக நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரினார்.
தமிழ் மக்கள் தமது பாரம்பரிய வாழிடப் பிரதேசங்களை தாமே நிர்வகிக்கும் உரிமையை வழங்குவது, விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடைத் துறைகளில் நீண்டகாலமாக நிலவும் வாழ்வாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு பேரணிகளிலும் பத்து அரசியல் மற்றும் பொருளாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரகடனம் வெளியிடப்பட்டது. மாகாணசபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அக்கட்சி மீண்டும் வலியுறுத்தியது.
இதற்கிடையில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையிலான ‘தமிழ்த் தேசியப் பெரவை’ நல்லூரிலும், தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்திலும் மே தினப் பேரணிகளை நடத்தின.