முன்னாள் இராணுவ வீரருக்கு 6 மாத சிறைத்தண்டனை
Former soldier sentenced to 6 months in prison
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு எதிரான கடுமையான பாலியல் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (23)ஆறு மாத கடும் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.
பயிற்சி மருத்துவரின் ஸ்மார்ட்போனை திருட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தே தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்கிரமரத்ன இத்தீர்ப்பினை வழங்கினார்.
இத்துடன், குற்றவாளிக்கு 1,500 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மருத்துவரின் கைப்பேசியை திருட்டுக்கு உதவியதோடு, அதனை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரரின் சகோதரி மற்றும் மற்றுமொரு சந்தேக நபர் ஆகிய இருவரும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இவ்விருவருக்கும் தலா ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அது இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1,500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
வழக்கின் பின்னணி:
குறித்த முன்னாள் இராணுவ வீரர், பெண் மருத்துவர் ஒருவருக்கு எதிரான கடுமையான பாலியல் குற்றச்சாட்டில் கிட்டத்தட்ட 7 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடுமையான ஜாமீன் நிபந்தனைகளின் பேரில் அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. எனினும், மூன்று மாதங்களுக்கும் மேலாகியும் அவரால் அந்த ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமற் போனது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவர் வெளிநாடு செல்வதைத் தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நேரடி கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டிலும் இவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக இவரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அனுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு தலைமை நீதவான் முன்னதாக உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Editor