மட்டக்களப்பில் நவீன மூன்று மாடி நூலகம்: ஜனாதிபதி திறந்து வைத்தார்
மட்டக்களப்பில் நவீன மூன்று மாடி நூலகம்
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய பொது நூலகக் கட்டிடத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று அதிகாரப்பூர்வமாக மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் கே. சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி, முன்னர் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நூலகத் திட்டத்தின் வெற்றிகரமான நிறைவைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் பராமரிப்பின் கீழ் உள்ள இந்தப் பொது நூலகம், மத்திய அரசு மற்றும் மாகாண அரசு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளை உள்ளடக்கிய மூன்று மாடிக் கட்டடமாகும்.
இப்புதிய நூலகக் கட்டடத்தின் சிறப்பம்சமாக, சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
நாட்டில் வாசிப்புக் கலாசாரம் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது என்று ஜனாதிபதி திசாநாயக்க குறிப்பிட்டார்.
"நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது சிறைச்சாலையின் தேவையை இல்லாமல் செய்வதாகும்" என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பொது நூலகத்தின் புதிய கட்டடத்தைத் திறப்பதன் மூலம் தமிழ் மக்களின் புத்தக வாசிப்புக் கலாசாரத்தை முன்னோக்கிச் செல்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இதற்கிணங்க, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
புதிய நூலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி, மாநகர சபை ஊழியர்களுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது மேயர் கே. சிவம் பாக்கியநாதன், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதியால் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கந்தசாமி பிரபு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Editor