மத்திய கிழக்கு போர்நிலை: இலங்கை நடுநிலைக் கொள்கை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
மத்திய கிழக்கு போர்நிலை: இலங்கை நடுநிலைக் கொள்கை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கை அரசாங்கம் எந்த தரப்புக்கும் சார்பாக அல்லாமல் நடுநிலையான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க Dissanayake தெரிவித்துள்ளார்.
இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இலங்கை அரசு பக்கச்சார்பாக செயல்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். அதேவேளை, மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உதவிகளிலிருந்து இலங்கை ஒருபோதும் பின்வாங்காது என்றும் குறிப்பிட்டார்.
இன்று (05) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஈரானுடன் தொடர்புடைய கப்பல் விவகாரத்திலும் இலங்கை நடுநிலையான மற்றும் இராஜதந்திர அடிப்படையிலான அணுகுமுறையையே பின்பற்றுவதாக தெரிவித்தார்.
மேலும், கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் காணப்பட்ட ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், என்ஜின் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு அல்லாது திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு. எந்த நாட்டுக்கும் சார்பாக நாம் செயல்படவில்லை. எங்கள் கடற்பரப்பில் இருந்து உதவி கோரப்பட்டதால், அதை சர்வதேச சட்டங்களும் இராஜதந்திர நடைமுறைகளும் அடிப்படையாகக் கொண்டு கையாண்டோம்,” என ஜனாதிபதி கூறினார்.
அமைதியை விரும்பும் நாடாக இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேண விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மனிதநேய அடிப்படையில் மனித உயிர்களை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த கப்பல் விவகாரத்தை முன்னிட்டு அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார். குறிப்பாக, அந்த கப்பலில் சிறுவர்கள் உள்ளனர் என்றும் அரசு அவர்களை புறக்கணிக்கிறது என்றும் கூறி சிலர் அரசியல் நோக்கத்துடன் தகவல்கள் பரப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இது எந்தப் போர் நடவடிக்கைக்கும் ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட முடிவு அல்ல. மனித உயிர்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட மனிதாபிமான தீர்மானம் மட்டுமே. சர்வதேச ஒப்பந்தங்களையும் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு, இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
Editor