சமூகப் பாதுகாப்பு வரி உயர்வு வாகன சந்தையில் புதிய சவால்!
சமூகப் பாதுகாப்பு வரி உயா்வு
மே மாதம் 01 ஆம் திகதி முதல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களின் விலைகளும் கணிசமாக உயரும் என வாகன இறக்குமத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கிறது.
அரசாங்கம் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரியை (SSCL) 2.5% ஆக உயர்த்த முடிவெடுத்துள்ளதால், இந்தப் புதிய வரி திருத்தம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நுகர்வோர் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை வாகன இறக்குமத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் திரு. உஸ்மான் அலி கூறுகையில், முன்னர் 1.25% ஆக இருந்த சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி, மே முதல் தேதி முதல் 2.5% ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னர் தனிப்பட்ட இறக்குமத்தியாளர்கள் இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த போதிலும், புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இறக்குமத்தியாளர்கள் மற்றும் தனிப்பட்ட இறக்குமத்தியாளர்கள் இருவரும் சுங்க அனுமதியின் போது இந்த வரியை செலுத்த வேண்டும் என்று அவர் விளக்கினார்.
இந்த வரித் திருத்தம் காரணமாக, வாகனம் ஆர்டர் செய்யப்பட்ட போதைய விலையை விட, நாட்டை வந்தடைந்து சுங்க அனுமதி செய்யப்படும் போது புதிதாக விதிக்கப்பட்ட 2.5% வரியை நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்கும்.
முந்தைய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கும் புதிய வரி பொருந்துவதால், சந்தையில் வாகனங்களின் ஒட்டுமொத்த விலையும் உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கின் புவி-அரசியல் கலவரம் காரணமாக, ஜப்பானிய வாகன இணையதளங்களில் அடிக்கடி ஏற்படும் விலை மாற்றங்கள் நாட்டில் இறக்குமதி விலைகளை நிர்ணயிப்பதற்கும் இடையூறாக அமைந்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியின் சமீபத்திய இராணுவ நிலைமை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியின் நெருக்கடி காரணமாக, உலகளவில் எண்ணெய் விலைகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதும் நாட்டில் வாகன விலை உயர்வை மறைமுகமாகப் பாதித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்குச் சுங்கத் திணைக்களத்தினால் அதிக மதிப்பை நிர்ணயிக்கும் போக்கு இருப்பதாகத் திரு. உஸ்மான் அலி தெரிவித்தார்.