ஈரான் மீதான போர் சொல்லும் செய்தி!

ஈரான் மீதான போர் சொல்லும் செய்தி!

ஈரான் மீதான போர் சொல்லும் செய்தி!
ஈரான் மீதான போர் சொல்லும் செய்தி!

*மத்திய கிழக்கு பொருளாதார முதலீடுகளை மேற்கு- ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றுவதே, அமெரிக்கத் திட்டம்.

*இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு நெருக்கடி 

*இந்திய வெளியுறவுக் கொள்கைக்குள் ஒளிந்திருக்கும் இலங்கை...

*ஜீசிசி நாடுகளின் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் தாக்கப்பட்டால்???

ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (Gulf Cooperation Council - GCC) நாடுகள் பாரசீக வளைகுடாவின் எல்லையில் உள்ள ஆறு அரபு நாடுகளாகும். யுஏஇ (UAE) எனப்படும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை இப்பேரவை உள்ளடக்கியது.

எண்ணெய் எரிவாயு மற்றும் அரசியல் - பொருளாதார இயங்குநிலையின் மீதான இந்த நாடுகளின் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக செயற்பட்டு வரும் இந்த அமைப்பு, 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 

இந்த ஆறு அரபுநாடுகளின் பொருளாதார – அரசியல் இலக்கின் அடிப்படையில் தான், மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார கட்டமைப்பும், புவிசார் நலன்களும் தங்கியுள்ளன.

மிகச் சமீபத்திய காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் என்பது எண்ணெய் சார்ந்திருப்பதில் இருந்து விலகி, 2032 ஆம் ஆண்டுக்குள் $24.7 பில்லியன் என எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வளர்ச்சி (Diversification) நோக்கி வேகமாக நகர்கிறது.

சவுதி அரேபியா மற்றும் யுஏஇ எனப்படும் டுபாய், அபுதாபி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகின்றன.

கச்சா எண்ணெய் வருவாயை மாத்திரம் நம்பியிருக்காமல், சுற்றுலா, நிதி, தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மத்திய கிழக்கு நாடுகள் முதலீடு செய்து வருகின்றன.

குறிப்பாக, யுஏஇ நாடுகளை மையப்படுத்திய சவுதி அரேபியாவின் திட்டங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன. அதாவது, பொருளாதாரப் பன்முகப்படுத்தல் (Diversification) இந்த நாடுகளின் பிரதான நோக்கம். 

இந்த நோக்கத்தை அரசியல் - பொருளாதார செயல் முறைமைகளின் ஊடாக இந்த நாடுகள் செயற்படுத்தி வரும் நிலைதான் மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட தவறியுள்ளது. குறிப்பாக மேற்கு - ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகள் குறைவடைந்து வந்தன.

இஸ்ரேல் உட்பட மேற்கு – ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெரும் முதலீட்டாளர்கள், டுபாய், கட்டார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அமீரகத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்.

இப் புன்பிலத்தில், 2015 ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை கடந்த பத்து வருடங்களில் பொருளாதாரம், வர்த்தகம், ஆகியவற்றில் ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை வளர்ச்சி அடைந்துள்ளது.

2024 ஆண்டு ஜீசிசி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product – GDP) சுமார் $2.3 ரில்லியன் ஆக உயர்ந்தது. 2022 ஆம் ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகரித்ததால் 7.3% வரையான வளர்ச்சியை எட்டியது.

2023 - 2024 ஆம் வருட காலத்தில் உலக பொருளாதார சவால்களினால் அதன் வளர்ச்சி குறைந்தாலும், 2025 - 2026 காலத்தில் மீண்டும் 3–4.5 % வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதாக தபிஸ்னஸ்இயர் (thebusinessyear) என்ற ஆங்கில செய்தித் தளம் சுடடிக்காட்டியுள்ளது. 

குறிப்பாக கடந்த பத்து வருடங்களில் எண்ணெய் சாராத (Non-oil sectors) வர்த்தகம் சுற்றுலா, நிதி, தொழில்நுட்பம் ஆகிய பொருளாதார துறைகளிலும் பாரிய வேகமாக பாரிய முன்னேற்றத்தை அடைந்தது.

அதேவேளை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன. இரண்டு உதாரணங்கள் பின்வருமாறு:

1) சவுதி அரேபியாவின் நியுஓம் எனப்படும் 'புதிய எதிர்காலம் (New Future - NEOM) எனப்படும் பெரிய திட்டம் 9 மில்லியன் மக்களுக்கான பெரிய நகர அபிவிருத்தித் திட்டமாகும். 2019 ஆம் ஆண்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.  

செங்கடலின் வடக்கு முனையில், எகிப்துக்கு கிழக்கே அகாபா வளைகுடா மற்றும் ஜோர்டானின் தெற்கு பகுதிகளை மையமாக் கொண்ட இத் திட்டத்தின் மொத்த பகுதி 26,500 கிமீ (10,200 சதுர மைல்) ஆகும்.

நீரில் மிதக்கும் தொழில்துறை வளாகம், உலக வர்த்தக மையம், சுற்றுலா விடுதிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களினால் இயக்கப்படும் நீளமான - குறுகிய நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் (linear City) உட்பட பல வளர்ச்சித் திட்டங்களை இது உள்ளடக்கியது. 

இது 2030 ஆண்டு நிறைவு பெற்று உலக மக்களின் பாவனைக்கு அனுமதிக்கப்பட இருந்தது.

2) டுபாயின் சகல துறைத் திறன் நகரத் திட்டங்கள் (Smart city) அதேநேரம் ஜீசிசி நாடுகள் உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையம், சீனாவுடன் வர்த்தகம் $298 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. 

இது ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய நாடுகளுடன், ஜீசிசி நாடுகளை இணைக்கும் முக்கிய பொருளாதார மையமாக மாற்றியுள்ளது.

இப் பின்னணியில் தான், அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போரை ஆரம்பித்தது. இஸ்ரேலின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஈரான் போரில் அமெரிக்க இலக்கு என்பது, ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் தொடர் வளர்ச்சியும், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளம் சாராத பொருளாதார வளர்ச்சியையும் அழிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டதை பகிரங்கமாக அறிய முடிகிறது.

ஈரான் மீதான போரினால், ஜீசிசி பேரவையை மையமாகக் கொண்ட, மத்திய கிழக்கு நாடுகளில் குடிநீர் பயன்பாட்டுக்காக, கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலைகள் (Desalination Plants) பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஜீசிசி நாடுகள் உலகளவில் 60% கடல் நீரை குடிநீராக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

குவைத், ஓமன், சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இந்த நாடுகளுக்கு இதுவே முக்கிய குடிநீராகும். 

ஆகவே, இந்த ஆலைகள் அமெரிக்காவினால் தாக்கப்பட்டால், அது மனிதாபிமான - பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என அல்ஜசீரா (aljazeera) என்ற ஆங்கில ஊடகம் அச்சம் வெளியிட்டுள்ளது. 

எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பை விட இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகள் நிர்வகித்து வந்த பொருளாதார ஸ்திரத்தன்மையின் எதிர்காலம் சிதைவடைந்துள்ளது என தகொன்வர்சேஷன் (theconversation) என்ற ஆங்கில ஊடகம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

புவிசார் அரசியல் பதற்றங்கள் (Geopolitical Tension) சந்தைகளில் நிலையற்ற தன்மையை (Volatility) அதிகரித்துள்ளன. 

இதன் காரண - காரியமாக மேற்கு – ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் தமது ஸ்திரத்தன்மையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்து ஜீசிசிக்கு ஒரு ஸ்திரமான வணிக மையமாக மாற்றும் பல்வகைப்படுத்தல் (Diversification) திட்டங்களும் தற்போது ஆபத்தில் உள்ளதாக ரொய்டர்ஸ் (Reuters) அமெரிக்க ஊடகம் கூறுகிறது.

ஜீசிசி நாடுகளின் எண்ணெய் சாராத துறைகளின் வளர்ச்சி (Growth Forecasts) குறைத்துள்ளது. ஏற்றுமதிக்கு முக்கியமாக விளங்கும் ஹார்மூஸ் நீரிணை (Strait of Hormuz) போர் ஆபத்தில் உள்ளதால், ஏற்றுமதி வருவாய்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் எரிபொருட் சந்தையில் நிலையற்ற தன்மை தொடரும் என்றும், குறுகிய காலத்தில் எரிபொருள் விலைகள் $80-$90 வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போர் நீடிக்கும் கால அளவைப் பொறுத்து, இதன் தாக்கம் அமையும். 

ஸ்திரத்தன்மையை தக்கவைத்தல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுதல், மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய வளங்களை உறுதி செய்தல் ஆகியவற்றில் பல சிக்கல்களையும் ஜீசிசி நாடுகள் எதிர்நோக்கும் அபாயம் உள்ளது.

உலக வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் ஹார்மூஸ் நீரிணை ஊடாகவே மேற்கொள்ளப்படுவதால், எரிசக்தி மட்டுமல்லாது உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து உலகளாவிய பணவீக்கம் ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது.

உலக எரிசக்தி வளங்களில் 31 சதவீதம் ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிடமே உள்ளன. உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் சுமார் 16 சதவீதத்தை சீனா பயன்படுத்துகிறது.

எனவே, ஈரான் மற்றும் வெனிசுலாவில் இருந்து சீனாவுக்கு கிடைக்கும் எரிசக்தி விநியோகத்தைத் தடுத்து, அதன் பொருளாதாரத்தை முடக்குவதே அமெரிக்காவின் திட்டமாகும்.அத்துடன் ஜீசிசி நாடுகளுக்கு செல்லும் முதலீட்டாளர்களை மேற்கு - ஐரோப்பிய நாடுகளுக்கு நகர வைப்பதும் பிரதான இலக்காகும். 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அறிக்கை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தில் வெனிசுலாவில் ஆரம்பித்து ஈரான் எனவும் இறுதியில் இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்றும் மறைமுக வார்த்தைகள் (Between Words) பொதிந்திருந்தன.

இக் கட்டுரையாளர் சில விடயங்களை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம், இந்திய இராஜதந்திர நகர்வுகள் பற்றியும் இக்கட்டுரையாளர் எடுத்துக் காட்டியிருந்தார்.

இப் பின்புலத்தில், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அறிக்கையின் பிரகாரம், இந்தோ - பசுபிக் பிராந்தியம் தனது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை இந்தியாவுக்கு அறிவிக்கும் நோக்கிலேயே, அமெரிக்கா, ஈரான் கப்பலை தாக்கயிருக்கிறது என்பது பகிரங்கமாகிறது.

 அது சீனாவுக்கும் வலுவான ஒரு செய்தியைக் கொடுத்துள்ளது.

ஆகவே, ரசியாவுடன் இந்தியாவுக்குள்ள இராதந்திர தொடர்பும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தயவுடன் இயங்க வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்குள்ள உள்ள பிரதான சங்கடமாகும். 

இப் பின்னணியில், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. 

இதனால் இரட்டைத் தன்மையான வெளியுறவுக் கொள்கைய இந்தியா இனிமேலும் தொடர முடியாத சூழல் உண்டு.

ரசிய - இந்தியக் கூட்டு அல்லது அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் என்ற கூட்டு. இந்த இரு கூட்டிலும் ஏதேனும் ஒரு கூட்டில் இந்தியா நிரந்தரமாக இணைய வேண்டிய கட்டாயத்தை ஈரான் போர் உருவாக்கியுள்ளது.

இந்திரா காந்தி காலத்தில் இருந்து சர்வதேச அரங்கில் அணி சேராக் கொள்கை என்ற பெயரில், இந்தியா இரு வகையான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வந்தது.

ஈரான் - பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு எதிரான போரில் கூட, இந்தியா மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது. 

அதேநேரம், ஜீசிசி நாடுகளின் பொருளாதாரம் தற்போது சரிவடைந்து வருவதால், இந்தோ - பசுபிக் பிராந்திய செயற்பாட்டில் சீனாவுக்கும் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் சீனா - ரசியா - இந்தியா ஆகிய நாடுகளை மையப்படுத்திய ”பிறிக்ஸ்” பொருளாதார கூட்டுக்கும் சிக்கல் எழும் அபாயம் உள்ளது.

இப் பின்புலத்தில், இந்தியாவின் சங்கடமான இராஜதந்திர நகர்வுக்குள் ஒளிந்து கொண்டு சீவியம் நடத்த வேண்டிய அவலம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

அ.நிக்ஸன்- பத்திகையாளர